Home » Blog » நீட் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

நீட் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

by Pramila
0 comment

மருத்துவப் படிப்புகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதையடுத்து 2017-ல், தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி கிட்டத்தட்ட 30 மாணவர்கள் தங்களது இன்னுயிரை இழந்த கதைகளும் தமிழ்நாட்டில் உண்டு. அதுமட்டுமின்றி, நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நீட் தேர்வு முறை அமலுக்கு வந்ததில் இருந்து, அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலாத கிராமப்புற, ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனி ஆகிவிட்டதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவது சமூகநீதிக்கு எதிரானது என தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் சரியான மாற்று முறை குறித்து பரிந்துரைக்க, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டு செப்.13ம் தேதி ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் – 2021’ என்ற மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஒருமனதாக எடுத்த தீர்மானத்தின்படி, சட்டப்பேரவையில் இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. பின், ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இதுதொடர்பாக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று(ஏப்.9) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக, பாஜக புறக்கணிப்பு

“இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, திமுக அரசு அழைத்துள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. அதேபோல் பாஜகவும் இக்கூட்டத்தை புறக்கணித்திருந்தது.

திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், பாமக, மமக, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றது.

தொடரும் சட்ட போராட்டம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து சட்ட போராட்டம், தேவைப்படின் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரைவு தீர்மானத்தை வாசித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஜூலை 2023ல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தீவிரமாக எடுத்துச் செல்ல முடிவு செய்வதாக தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது.
மருத்துவத் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது.

வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது. பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது. 13.9.2021-ல் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை முன்மொழிந்து, அன்றைய தினமே நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். நீட் விவகாரத்தில் அரசின் வேலையை செய்யாமல் அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஆளுநர். 8.2.2022-ல் 2வது முறையாக நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

சட்ட போராட்டத்தை தொய்வின்றி நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

விஜய் விமர்சனம்

“நீட் விவகாரத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டம், தனித் தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் திமுக தலைமையின் தொன்று தொட்ட வழக்கம்” என்று நீட் விலக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.