Home » Blog » தவெக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தவெக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

by Pramila
0 comment

விஜய் தலைமையில் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று(மார்ச் 28) திருவான்மியூரில் நடைபெற்றது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விஜய்யுடன் மேடையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளராக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு பெண் பிரதிநிதி என 2,000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

1. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்

மத்திய அரசு அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாநில சுயாட்சியை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

2. இருமொழிக் கொள்கையில் உறுதி

அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

3. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை சரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, மத்திய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது.

4. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் எப்படி என்கிற விளக்கம் இல்லவே இல்லை. விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும்.

5. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை

டாஸ்மாக் நிறுவனத்தினாலும், அதீத போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல் போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உருவாக்கியுள்ள திமுக அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

6. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருந்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்

இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

7. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்

கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. இதை வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது.

9. தலைவருக்கே முழு அதிகாரம்

தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவைக் கொண்டு தலைவர் விஜய்க்கு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் உரிமையும் அளிக்கப்படுகிறது.

இதர தீராமானங்கள்

10. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு.
11. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான கையாலாகாத திமுக அரசுக்குக் கண்டனம்.
12. சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
13. சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.
14. டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
15. கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.

அதைத் தொடர்ந்து, தவெகவில் புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.