Home » Blog » குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்!

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்!

by Pramila
0 comment

தமிழ்நாடு அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 8ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 மசோதாக்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என கூறியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இவ்வழக்கு தொடர்பான 414 பக்க முழு தீர்ப்பு விவரங்களை உச்சநீதிமன்றம் நேற்றிரவு இணையதளத்தில் பதிவேற்றியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசிதழில் 10 மசோதாக்களும் சட்டமானதாக இன்று(ஏப்.12) அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் முதல்முறை

ஒரு மாநில அரசு அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு பதிலாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசோதாக்களை சட்டமாக்குவது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். மேலும், தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய நவ.18, 2023 தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் இந்த வழக்கில், ஆளுநருக்கு மட்டுமல்லாமல் குடியரசுத் தலைவருக்கும் மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதாவது, ஆளுநரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் அத்தகைய குறிப்பு பெறப்பட்ட நாளிலிருந்து 3 மாத காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என்று முதல் முறையாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஒருவேளை முடிவெடுக்க தாமதம் ஆனால், அதற்கான உரிய காரணத்தை மாநில அரசுக்கு, குடியரசுத் தலைவர் தெரிவிக்க வேண்டும்.

காலக்கெடுவிற்குள் குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட முடியும்.

மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டாலும் குடியரசுத் தலைவருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு.

ஆளுநரைப் போலவே, குடியரசுத் தலைவரும் கூட மசோதாக்கள் மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

மாநிலங்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்க வேண்டும். மேலும், மசோதா மீது ஒன்றிய அரசு அளித்த பரிந்துரைகளை மாநில அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும்.

ஒருவேளை மாநில அரசின் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறது என குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.