அண்மையில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு ‘தேச விரோதி’யின் முடிவுராப் போராட்டம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இந்த கட்டுரை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதில் பேசப்படாத பல நியாயங்களை அவர் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த போராட்டத்தில், சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவான ஒரு கும்பல் உட்புகுந்து நடத்திய கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் தேச விரோதியாக்கப்பட்ட கதையை அவர் இக்கட்டுரையில் எடுத்துரைத்துள்ளார்.
பிரகாஷ்ராஜ் எழுதிய கட்டுரை
ஒரு சினிமா படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தேன். படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் ஓய்வு நேரம் கிடைத்தது. டெல்லியில் கோடை வெயில் கொளுத்தியது. அங்கு புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லியில் இருந்தார்கள். தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள, வக்ஃபு திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் உமர் காலித்தை நினைத்தேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகப்போகிறது. அவருடைய பெற்றோரும் எனது நினைவுக்கு வந்தார்கள். உடனே அவர்களை சந்திக்க புறப்பட்டேன்.
யார் தேச விரோதி; யார் தேச பக்தர்?
தேச விரோதி எனப்படும் உமர் காலித்தை உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பற்றிக் காண்பதற்கு முன் தேச விரோதி என்பவர் யாரென்று நாம் புரிந்துகொள்ள முயல்வோமா? அதை தெரிந்துகொள்ளாமல், தேச விரோதிக்கும், தேச பக்தருக்குமான வேறுபாட்டை எப்படி அறிய முடியும்?
அகிம்சையை நோக்கி, நாட்டை ஒற்றுமைப்படுத்திய மகாத்மா காந்தி, மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தேசம் என்பது எல்லைக் கோடுகளால் ஆன ஒரு வரைபடம் அல்ல, அதில் வாழும் மக்களே தேசம் என்று அவர் நம்பினார். நாட்டின் எல்லா மக்களும் தம் விருப்பத்திற்குரிய மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், தேசம் அவர்களை சகோதர உறவில் பிணைக்கிறது என்றே அவர் நம்பினார். சுதந்திர இந்தியாவில் தனது மேற்கண்ட கருத்துக்களுக்காக நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார்.
நமது நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே, காந்தி தேச விரோதியாகவும், கோட்சே தேச பக்தராகவும் மாறிவிட்டார்கள். சமூகத்தைப் பிளவுக்குள்ளாக்குவதும், மத அடிப்படையில் வெறுப்பை விதைப்பதையுமே தம் வரலாற்றுத் திட்டமாகக் கொண்ட நபர்கள் தம்மை தேச பக்தர்களாக முன்னிறுத்துகிறார்கள். தம்முடைய வகுப்புவாதத் திட்டத்தை எதிர்த்து நிற்கும் எவரையும் தேச விரோதிகள் என்று இவர்கள் முத்திரை குத்துகிறார்கள். இப்படித்தான் இளைஞர் உமர் காலித்தும் தேச விரோதியாக மாற்றப்பட்டார்.
உமர் காலித்தின் அச்சமற்ற போர்
பன்முகத்தன்மையை தமது இதயத்துடிப்பாகவும், ஆன்மாவாகவும் கொண்டுள்ளதாக நம்பப்படும் நமது அரசியலமைப்பினை அழிக்க முயற்சிப்போருக்கு எதிராகக் குரல் கொடுத்துச் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முழங்குவது, இனவாத வெறுப்பைப் பரப்பி, அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்களை பலி கொள்வோருக்கு எதிராகத் தெருவில் இறங்கி போராடுவதுதான் உமர் காலித்தின் வேலை. இறந்த மீன் ஆற்றின் போக்கில் பயணிக்கும். உமர் காலித் போல நீரோட்டத்தை எதிர்த்து முன்னேற மீன்களுக்கு உயிர் இருக்க வேண்டும். பொய்களும், வெறுப்பும் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருக்க, அவற்றுக்கு எதிராக அவர் அச்சமின்றி நீச்சல் அடிக்கிறார். காந்தியத்தின் உண்மையான வாரிசுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
“சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டம் எங்களால் தொடங்கப்பட்டதில்லை, எங்களைக் கொல்வதால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது” என்று மாவீரன் பகத் சிங் கூறினார். அந்த மரபைத்தான் உமர் காலித் பின்பற்றுகிறார். மாணவர் தலைவர் என்ற முறையில், உமர் காலித் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு எதிராகப் போராடினார். சி.ஏ.ஏ சட்டம் நமது நாட்டை பிளவுபடுத்துவதையும், சகோதரத்துவத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டத்திற்கு எதிராக, பிப்ரவரி 2020ல் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டத்திற்கு ஆதரவான சக்திகள் நுழைந்ததால் போராட்டம் வன்முறையாக்கப்பட்டது. அமைதியாக நடந்த போராட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் கொல்லப்பட்ட 53 பேரில் பெரும்பாலோர் முஸ்லீம்கள். வன்முறையைத் தூண்டிய ஆளும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் கும்பல் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில், உமர் காலித் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
மறுக்கப்பட்ட ஜாமீன்
உமர் காலித்தின் ஜாமீன் மனுக்களை அமர்வு நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்தன. 2023ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, விசாரணை கூட நடக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 5 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது. “உமர் காலித் நிரபராதி என நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தில் 20 நிமிட விசாரணை மட்டுமே எங்களுக்கு தேவை” என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது வரை, அந்த 20 நிமிடங்களை கூட ஒதுக்க உச்ச நீதிமன்றத்தால் முடியவில்லை.
மனவலிமை தரும் நண்பர்கள்
உமர் காலித்தின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரது நண்பர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து கொண்டனர். அப்போது ஒவ்வொரு வாரமும், சிறையில் உமரை அவர்கள் தவறாமல் சந்திப்பதாக கூறினார்கள். “வேலை நெருக்கடியான சூழலில் அதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?” என்று நான் கேட்டேன். உமரின் நண்பர், சிறையில் இருந்த அமீர் என்பவரின் கதையை என்னிடம் கூறினார். அமீர் சிறையில் அடைக்கப்பட்ட முதல் 3 மாதங்களில், அவரது பெற்றோர்களும் நண்பர்களும் அடிக்கடி சென்று பார்த்து வந்தனர். பின் அவர்களுடைய வறுமை காரணமாக அந்த அளவுக்குத் தொடர்ந்து செல்ல இயலாமல் போனதால், அமீரின் வலிமையை அது சிதைத்தது. அவர் மெல்ல மெல்ல உடையத் தொடங்கினார். எளிதாக ஜாமீன் பெற்றிருக்க முடியும் என்றாலும், அவர் 10 ஆண்டுகள் சிறையில் வாடினார். சிறை ஒரு நபரின் தன்னம்பிக்கையை சிதைத்து, மனித ஆன்மாவை உடைக்கிறது. அமீரின் துயர அனுபவமே உமரின் நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் அவரை சந்திக்கத் தூண்டியது. ஒவ்வொரு சந்திப்பின் போதும் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று சொல்ல அவர்கள் உமரை சந்தித்து வருகின்றனர். நண்பனின் உள வலிமையை காக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு நான் பெருமிதமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்.
நடைப் பிணமாக வாழ்வதில் என்ன பயன்?
உமரின் தாயார் என்னை அன்புடன் வரவேற்றார். அவரது தந்தை வக்ஃபு மசோதா மீதான விவாதத்திற்கு சென்றிருந்தார். பக்ரீத் பண்டிகை முடிந்து சில நாட்களே ஆன அந்த நேரத்தில், உமர் காலித்தின் தாயார் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார். தன் மகன் அவருடன் இல்லாத வலி அவரது கண்களில் இருந்தபோதிலும், “என் மகன் விரைவில் விடுதலையாவான். நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது” என்று எங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தன.
இதற்கிடையில், திரும்பி வந்துவிட்ட உமரின் தந்தை, எங்களுடன் அமர்ந்து பேசினார். நான் அவரிடம், “உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம்” என்று சொன்னேன். “அவர் எந்தக் காரணத்திற்காகப் போராடி சிறைக்குச் சென்றார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்களும் அவனுடன் இருக்கிறோம்” என்று அவர் எங்களிடம் சொன்னார். நான் அப்படியே நெகிழ்ந்து போனேன்.
எங்களுடன் இருந்த உமரின் நண்பர் ஒருவர் அவரது தந்தையிடம், “உமர் ஜாமீனில் வெளியே வந்ததும், அவரை பிரகாஷ் சாருடன் தென்னிந்தியாவுக்கு அனுப்புவோம். அங்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்” என்று கூறினார். உடனே உமரின் தந்தை, “அவர் முன்னெடுத்த போராட்டத்திற்கான காரணங்கள் இங்கே டெல்லியில் இருக்கும்போது வேறு எங்காவது போய் ஏன் அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்?” என்று கேட்டார். அவரின் வார்த்தைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. அவ்வளவுதான், நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதற்குப் போராட்டமே சான்று. உரிமைகளுடன் வாழ்வதற்கு நாம் போராட வேண்டும். நடைப் பிணமாக வாழ்வதில் என்ன பயன்?
இவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள்
உமர் காலித்தும், அவரது பெற்றோர்களும்தான் உண்மையான தேசபக்தர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டும் 5 ஆண்டுகளாக சிறையில் வாடவில்லை. ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையும், அதை உறுதி செய்திடும் அரசியலமைப்பும் சிறையில் வாடுகிறது.
இவ்வாறு உரிமைக்காக போராடிய உமர் காலித் தேச விரோதியாக்கப்பட்டு சிறையில் இருக்கும் வலியை உணர்ச்சிப் பொங்க தனது கட்டுரையில் எடுத்துரைத்துள்ளார் பிரகாஷ்ராஜ்.