விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தி திரைப்படம் தான் ‘சந்தோஷ்’. இது பிரிட்டிஷ் – இந்திய இயக்குநரான சந்தியா சுரி இயக்கத்தில், இருநாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம். இப்படம் 2024 ஜூலை 17 அன்று பிரான்ஸில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தை கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் சில மாற்றங்களை செய்தால் மட்டுமே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறலாம் என மத்திய சென்சார் போர்டு (CBFC) கூறிவிட்டது.
கலை சுதந்திரம் எங்கே போனது?
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வட இந்தியாவை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் பெண் வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு, காவல்துறையின் வன்முறை சம்பவங்களை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
சாதி மற்றும் பாலின வன்முறையை அம்பலப்படுத்தும் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டு, தேசியவாதக் கதைகள் கொண்டாடப்படுவது, கலை சுதந்திரம் எங்கே போனது? என்ற கேள்வியை எழுப்புகிறது.
படத்தின் கதை சுருக்கம்
வட இந்தியாவில் காவல்துறை அதிகாரியாக இருந்து இறந்த ஒருவருடைய மனைவிக்கு அந்த போலீஸ் வேலை கிடைக்கிறது. 14 வயதுமிக்க ஒரு தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்கும் வேலையில் அந்த விதவை பெண் போலீஸ் ஈடுபடுகிறார். அப்போது அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தது தான் இந்த படத்தின் கதை. ஷஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“இந்த நாட்டில் இரண்டு விதமான தீண்டாமை இருக்கிறது. ஒன்று இவர்களையெல்லாம் தொடவே கூடாது என்று ஒடுக்குவது, மற்றொன்று இவர்களையெல்லாம் தொடவே முடியாது என்று அச்சப்படுவது”- இப்படத்தில் இடம்பெற்ற பிரபல வசனம்.
ஆஸ்கருக்கு பரிந்துரை
‘சந்தோஷ்’ திரைப்படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படமாகும். அதுமட்டுமின்றி, இந்தப் படம் உலகத் திரைப்பட விழாக்களான, ‘Seville European Film Festival, Camerimage, TOKYO FILMeX, National Board of Review, British Independent Film Awards, Asian Film Awards’ ஆகியவற்றில் பல விருதுகளை வென்று குவித்துள்ளது.
சென்னையிலும் தடை
‘சந்தோஷ்’ திரைப்படத்தில் போலீஸ் வன்முறை, சாதிய வன்கொடுமைகள் அப்பட்டமாக காட்டப்படுவதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், இந்தியா குறித்த தவறான பிம்பத்தை இப்படம் உள்நோக்குடன் சித்தரிப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இத்திரைப்படத்தை இந்தியத் திரையரங்கங்களில் வெளியிட மத்திய தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக, அண்மையில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தால் சென்னையில் நடத்தப்பட்ட PK ரோஸி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட இருந்த நிலையில், அதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்துத்துவா ஆட்சி செய்யும் கோயம்புத்தூரில் ஒரு முஸ்லிம் விற்பனையாளரின் கதையை மையமாகக் கொண்ட ‘நசீர்’ என்ற திரைப்படமும் திரையிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. மீறி திரையிட்டால் தியேட்டருக்கான உரிமம் பறிபோகும் என மிரட்டலும் விடுக்கப்பட்டது.
துணிந்து நிற்கும் பா.இரஞ்சித்
மக்களுக்கான அரசியலையும் வாழ்வியலையும் திரை வழியாக பேசும் இயக்குநர் பா.இரஞ்சித், “‘சந்தோஷ்’ திரைப்படத்தை இங்கு திரையிட முடியவில்லை என்றால் பொது வெளியில் திரையிடுவோம். அதற்காக என்னை கைது செய்தால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். அதுவும் புது அனுபவமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநரின் வேதனை
‘சந்தோஷ்’ படத்தின் இயக்குநர் சந்தியா சுரி, இந்தியாவில் இப்படம் வெளியிட தடை செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமும், மனவேதனையும் தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், “இது எங்கள் குழுவினருக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருக்கின்றது. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் இந்திய சினிமாவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னர் வெளியான படங்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டுள்ளதா? காவல்துறையினர் பற்றி எடுக்கப்பட்ட மற்ற படங்களைப் போல எங்களின் படம் வன்முறையை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்படவில்லை. இதில், பிரச்சனைக்குரியதாக எதுவுமே இல்லை” என்று கூறினார்.
முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ஆவணப்படங்களான ‘For India’, ‘Around India with a Movie Camera’ உள்ளிட்ட படங்களும் இந்தியா குறித்த தவறான பிம்பங்களை உருவாக்குவதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
‘இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்’
தணிக்கை குழு கூறிய மாற்றங்களை செய்தால் படத்தின் தன்மையையே அது இழந்துவிடும் என்று கூறிய இயக்குநர் சந்தியா சுரி, “படத்தின் உயிரோட்டமான காட்சிகளை நீக்காமல், அதன் சாராம்சம் நீர்த்துப்போகாமல் இந்திய மக்களுக்கான ‘சந்தோஷ்’ படத்தை, இந்திய மக்களிடமே கொண்டு சேர்ப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
அரசியல் ஆதாயமாகும் திரைப்படங்கள்
சமூக அவலங்களை பேசும் திரைப்படங்கள் இந்தியாவில் தடைசெய்யப்படும் இதே வேளையில், ஒருசில திரைப்படங்களுக்கு அரசே சிறப்பு விடுமுறை அறிவித்து ஊக்குவித்த கதைகளும் உண்டு.
உதாரணத்திற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை பார்க்க, ஒருசில வட மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டது. இது காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தை நாடுமுழுவதும் உள்ள அனைத்துதரப்பட்ட மக்களும் அவசியம் காணவேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர். எனவே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக திரைப்படங்களைப் பயன்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகின்றது.