குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 14 வயதில் சதம் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஒரே போட்டியில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 209 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
புதிய வரலாறு படைத்த வைபவ்
ராஜஸ்தான் அணி வீரர் வெறும் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்தார். அதுவும் முஹம்மது சிராஜ், இஷாந்த் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா, ரசீத்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற சர்வதேச பந்துவீச்சு படையைக் கொண்ட குஜராத் பவுலர்களை பதம் பார்த்தார்.
இதன்மூலம் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர், ஒட்டுமொத்தமாக இரண்டாவது வீரர் என்ற மெகா சாதனையையும் படைத்தார்.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவரும் இவரே. சூரியவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ராஜஸ்தான் அணியின் புதிய சாதனை
ஐபிஎல்-ல் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 95 பந்துகளில் எட்டிப் பிடித்து ராஜஸ்தான் அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் குறைந்த பந்தில் 200 ரன்கள் இலக்கை எட்டி பெங்களூரு அணி அச்சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த 2 சாதனைகளும் குஜராத் அணிக்கு எதிராகவே படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட 14 வயதான ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி, இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘உங்க 14 வயசுல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’ என்ற கேள்வியை நெட்டிசன்கள் இணையத்தில் எழுப்பி டிரெண்ட் செய்து வருகின்றனர்.