1988ம் ஆண்டு நவம்பர் 25ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி-சோவியத் யூனியன் அதிபர் கோர்ப்பச்சேவ் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், 1989ம் ஆண்டே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் எழத் தொடங்கின. 2002ம் ஆண்டு மார்ச் 31ல் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2011 செப்டம்பரில் கூடங்குளம் முதலாவது அணு உலை திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
S.P.உதயகுமார் தலைமையிலான மக்கள் இயக்கம்
இந்த நிலையில், அணுவுலைக்கு எதிரான சூழலியலாளர்களின் தொடர் போராட்டமானது 2011ம் ஆண்டு S.P.உதயகுமார் தலைமையிலான அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளம் போராட்டத்தை புதிய களத்திற்குக் கொண்டு சென்றது. கூடங்குளம் அணுவுலையை சுற்றி இருக்கக்கூடிய மக்கள் இடிந்தகரையில் முகாமிட்டு தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 900 நாட்களை கடந்து நடந்தது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும், மக்கள் போராட்ட வழிமுறையில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது. போராட்டத்தின் உச்சக்கட்டமாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் ஊர்புகுந்து தடியடி நடத்தினர், கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டது. இடிந்தகரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளே செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் மீதும், பொதுமக்கள் ஒவ்வொருவரின் மீதும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டன.
2025ம் ஆண்டுக்கான ‘Nuclear-Free Future’ விருதுக்கான அங்கீகாரம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில், உள்ளூர் மக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைப்பதில் S.P.உதயகுமார் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின்னர், கதிர்வீச்சு அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட அணுசக்தியின் ஆபத்துகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை கௌரவிக்கும் விதமாக 2025ம் ஆண்டுக்கான ‘Nuclear-Free Future’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா கடந்த 4ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. விசா மறுக்கப்பட்டதால் அவர் வீடியோ கான்பரன்சிங் வழியாக விருதை ஏற்றுக் கொண்டார்.
அப்பொழுது S.P.உதயகுமார் உரையாற்றியதாவது,
“அனைவருக்கும் வணக்கம்!
2025ம் ஆண்டுக்கான ‘Nuclear-Free Future’ விருது எனது பெயரிலும், எங்கள் போராட்டத்தின் பெயரிலும் வழங்கப்பட்டதை பெருமையாகப் பகிர்கிறேன்.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ரஷ்யாவின் தொழில்நுட்பத்தில் இயங்கும் கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஆண்கள் என லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராடி வருகின்றனர். இதற்காக பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலரும் காவல் துறையின் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வழக்குகளும் பதியப்பட்டன. மேலும் தங்களது சொத்து மற்றும் வருவாயை இழந்து பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், திரைப்பட பிரபலங்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகப் பணியாளர்கள், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சில நேர்மையான அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் 2011-2014 கால கட்டத்தில் நடந்த அணுவுலை எதிர்ப்பு போராட்டத்தில் மிகுந்த பங்காற்றியுள்ளனர்.
எங்கள் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரின் சார்பாக என்னைத் தேர்ந்தெடுத்ததையும், அந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களின் சார்பாக, இந்த மிகப்பெரிய விருதை எனக்கு வழங்கியதையும் நான் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த விருதை ‘மக்கள் விடுதலைப் புரட்சியாளர்’ அபிரகாம் லிங்கன் குரல் ஒலித்த மண்டபத்தில் பங்கேற்று நேரில் பெற முடியாதது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது. ஆனாலும், கடும் துன்பங்களை எதிர்கொண்ட பிறகு, இந்த விருதைப் பெறுவதும், எங்கள் மக்களுக்கும் போராட்டத்திற்கும் கிடைத்துள்ள அங்கீகாரத்தை கொண்டாடுவதும் எனக்கு பெருமை அளிக்கிறது.
கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 1988ல் தொடங்கியது. 1986 ஏப்ரலில் நடைபெற்ற செர்னோபில் பேரழிவிற்கு பிறகு இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இந்திய அரசு “4-I” (Ignore, Insult, Intimidate, Incinerate) என்னும் உத்தியைப் பயன்படுத்தியது.
அதாவது அணு மின் திட்டத்தின் அடிப்படை தகவல்களை கேட்டபோது முழுமையாக புறக்கணிக்கப்பட்டோம் (Ignore). எங்களை “இந்திய எதிர்ப்பாளர்கள்”, “தேசதுரோகிகள்”, “அமெரிக்க ஏஜென்டுகள்”, “இடதுசாரி தீவிரவாதிகள்” என்று அவமதித்தனர் (Insult). எங்கள் மீது 349 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர் (Intimidate). எங்களது பாஸ்போர்ட், வங்கிக்கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன (Incinerate).
அரசின் அத்துமீறல்களை எதிர்த்து போராடியபோது, சிலர் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். சிலர் விமானத் தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும் அவர்களது அலட்சியமான நடவடிக்கைகளினால் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
2014ல் திட்டமிட்ட முறையில் போராட்டம் முடிவடைந்தாலும், அணு மின் திட்டத்திற்கு எதிரான எங்கள் கருத்துகளை அமைதியான, ஜனநாயக முறையில் தொடர்ந்து மக்களிடம் பரப்பி வருகிறோம். எங்கள் கருத்துக்கள் மிக எளிதானவை:
அணு மின் சக்தி மலிவானதோ, பாதுகாப்பானதோ, தூய்மையானதோ, காலநிலைக்கு உகந்ததோ இல்லை.
அணுசக்தியும் அணு குண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. அதாவது அணு உலைகள் நிலையான வெடிகுண்டுகளாகும்; அணு வெடிகுண்டுகள் நகரும் அணு உலைகள் ஆகும்.
மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு அணு மின் சக்தி பொருந்தாது.
1984 டிசம்பரில் போபால் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையில் உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவு நடந்தது. அந்தப் பேரழிவின் ஆபத்தான வேதியியல் கழிவுகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அகற்றப்பட்டன.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள அணுசக்தி ஆதரவாளர்கள் பலரும், அணு மின் சக்தியை சுற்றுச்சூழல் அழிவுக்கான தீர்வு என்று கூறுகிறார்கள். ஆனால், இதனால் எவ்வளவு கார்பன் வெளியேற்றப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும். அடுத்த 48,000 ஆண்டுகளுக்கு ஆபத்தான அணு கழிவுகளை எப்படி கையாளப் போகிறோம்?
இந்தியா-அமெரிக்க அணு ஒப்பந்தமானது இந்தியாவின் பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்கானது அல்ல. இது அமெரிக்க கம்பெனிகளுக்கு பெரும் லாபங்களை ஈட்டும் வணிக ஒப்பந்தம் ஆகும். அதேபோல், ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான், நமீபியா, அர்ஜென்டினா போன்ற நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள அணு ஒப்பந்தங்கள், அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களுக்கு லாபத்தை வழங்கும். ஆனால் இந்தியாவின் ஏழை மக்களுக்கு அழிவையே தரும். லாபம் ஈட்டும் ஆர்வம், அதிகார ஆசை ஆகியவையே அணு தொழில்துறையை இயக்குகின்றன.
யுரேனியம் செறிவூட்டல், அணு வெடிகுண்டு சோதனை போன்றவைகள் உலகின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகவே மாறுகின்றன. அணு ஆதிக்கமும் பாசிசமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
இங்கு பிரபல கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறியதை குறிப்பிட விரும்புகிறேன்.
“Some say the world will end in fire,
Some say in ice.
From what I’ve tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.”
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் (TPNW) மூன்றாவது மாநிலக் கூட்டத்தில் (3MSP) கலந்து கொள்ளும் குழு உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ராபர்ட் ஃப்ரோஸ்ட்டின் வரிகளை மீண்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
Woods are lovely, dark and deep,
But we have promises to keep!
And miles to go before we sleep,
And miles to go before we sleep!
நன்றி!”