Home » Blog » ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு? அதிர்ந்து போன பிசிசிஐ!

ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு? அதிர்ந்து போன பிசிசிஐ!

by Pramila
0 comment

கேப்டன் ரோகித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை தொடர்ந்து, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார். இதனால் பிசிசிஐ அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கோலியிடம் கோரிக்கை வைத்த பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 20ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் ஷர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்தனர். இந்த செய்தி வெளியாகி 2 மணி நேரத்திற்குள், கேப்டன் ரோகித் ஷர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து தற்போது விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார். ஆனால், உயர் அதிகாரிகள் அவரை இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணிக்கு பாதிப்பு

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்தார். ஆனால், அதன்பின் நடந்த போட்டிகளில் மோசமாக ரன் எடுத்ததிலிருந்து கோலி தனது டெஸ்ட் ஓய்வு குறித்து யோசித்து வருவதாகத் தெரிகிறது.

அந்த வகையில், கோலியும் ஓய்வை அறிவித்துவிட்டால், கே.எல்.ராகுல், சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருடன் இணைந்து, பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையில் களமிறங்குவது இந்தியாவுக்கு மிகவும் அனுபவமற்ற மிடில் ஆர்டராக மாறும். டெஸ்ட் அணியை வழிநடத்திய மூத்த வீரர்களான ரோகித் மற்றும் கோலி இல்லாமல் அணி பரிதவிக்கும் நிலை ஏற்படும்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சரியாக விளையாட முடியாவிட்டாலும் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் பேட்டிங் சரியாக அமைந்தால் அது எதிர் அணிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அவர் 2025, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.