பஞ்சாப் அணி லக்னோ அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
லக்னோ பவுலர்களை திணறடித்த பிரப்சிம்ரன்
ஐபிஎல் தொடரின் 54வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 91 ரன்கள் குவித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர். லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங், திக்வேஷ் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பேட்டிங்கில் தடுமாறிய லக்னோ அணி
இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது லக்னோ. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
வெற்றிக்காகப் போராடிய பதோனி
6வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன், அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 81 ரன்கள் சேர்த்த நிலையில் சமத் 45 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
புத்துயிர் பெற்ற பஞ்சாப் அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பெற்ற 7வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தற்போதுதான் 15 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பல வருடங்களாக ப்ளே ஆஃப் கதவையே எட்டிப்பார்க்காத பஞ்சாப் அணி இந்த ஆண்டு ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் எழுச்சி பெற்று கோப்பையை நோக்கி வெற்றி நடை போடுகிறது.