ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய 36வது ஐபிஎல் போட்டி நேற்று(ஏப்.19) ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய லக்னோ 180 ரன்கள் அடித்தது. பின்னர் 181 ரன்களை இலக்காகக் கொண்டு ராஜஸ்தான் களமிறங்கியது. ஆனால் ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய 14 வயது சிறுவன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
முதல் மேட்ச்சிலேயே மாபெரும் சாதனை
வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டம்ப்பிங் முறையில் அவர் ஆட்டமிழந்தார்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
2011 மார்ச் 27-ம் தேதி பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் தாஜ்புர் என்ற கிராமத்தில் பிறந்தார் வைபவ் சூர்யவன்ஷி. சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் நாட்டம் கொண்ட இவர், தந்தையின் முயற்சியால் 9 வயதிலேயே கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறையாகப் பயிற்சிபெறத் தொடங்கினார். 12 வயதில் பீகாரில் வினு மங்கட் தொடரில் 5 போட்டிகளில் 400 ரன்கள் குவித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் சொந்த மாநிலத்துக்காக ரஞ்சி டிராபியிலும் களமிறங்கினார். இதன் மூலம், 12 வயதிலேயே ரஞ்சிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனைப் படைத்தார்.
உலகளவில் சாதனை
கடந்த ஆண்டு, 19 வயதிற்குட்பட்ட ஆஸ்திரேலிய ஆணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் களமிறங்கி அதிரடியாக 58 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம், உலகளவில் U19 இளையோர் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தையும், அதில் இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். இந்நிலையில், தான் நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (13 வயது) ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய சஞ்சீவ் கோயங்கா
அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேற்று போட்டி முடிந்தபின் நேரில் சந்தித்து பாராட்டினார்.