ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், 2019ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 180+ என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டி அசத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட முயன்று 12 முறை தோல்வியை தழுவிய நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
விக்கெட் மழை பொழிந்த நூர் அகமது
ஐபிஎல் தொடரின் 57வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஹானே 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரசல் 38 ரன்னும், மனீஷ் பாண்டே 36 ரன்னும், சுனில் நரைன் 26 ரன்னும் எடுத்தனர்.
சிஎஸ்கே வீரர் நூர் அகமது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடக்கத்தில் தடுமாற்றம்; இறுதியில் வெற்றி
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய புதிய வரவான உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதன்பின் ஷிவம் துபேவுடன் தோனி இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 3 மாதங்களில், மாதம் ஒரு போட்டி வீதம் மொத்தமாக 3 போட்டிகளில் வென்றுள்ளது.
போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
இந்த போட்டியில் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அதன்படி கொல்கத்தா கேப்டன் ரஹானே ஐபிஎல்லில் 5000 ரன்களைக் கடந்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார்.
சிஎஸ்கே கேப்டன் தோனி 100 முறை நாட் அவுட்டாக இருந்த ப்ளேயர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முக்கியமாக, 2019ம் ஆண்டுக்குப் பின் சிஎஸ்கே அணி 180 எனும் இலக்கை சேஸ் செய்து வெற்றிகரமாக எட்டிப்பிடித்துள்ளது.
கொல்கத்தா நாக்-அவுட்?
கொல்கத்தா அணி ஏற்கெனவே 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று இருந்த நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமிருந்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால், சிஎஸ்கே அணிக்கு எதிராக நேற்று தோற்றதன் மூலம் கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்துள்ளது. இதனால், கொல்கத்தா கிட்டத்தட்ட நடப்புத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
ஓய்வு குறித்து பேசிய தோனி
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “ஓய்வு குறித்து தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. ஐபிஎல்-ல் 2 மாதங்கள் மட்டும்தான் விளையாடுகிறேன். அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை ஐபிஎல்-க்கு தயாராகும்போது எனது உடல்நிலை இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும்” என்றார்.