டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் 7வது நபராக களமிறங்கி டக் அவுட்டாகி வெளியேறினார். இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது. டெல்லி அணி எளிதாக இந்த இலக்கை கடந்து வெற்றி பெற்றது. வழக்கமாக பேட்டிங்கில் 4வது ஆளாக களமிறங்கும் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் நேற்று 7வது நபராக களமிறங்கினார். அவருக்குப் பதிலாக 4வது இடத்தில் அப்துல் சமத் களமிறங்கி 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 5வதாக ரிஷப் பண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது டேவிட் மில்லர் களமிறங்கினார். மிட்சல் மார்ஷ் ஆட்டமிழந்து வெளியேறிய போதாவது ரிஷப் வருவாரா என பார்த்தபோது இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி களமிறங்கினார்.
டக் அவுட்டான ரிஷப் பண்ட்
வரிசையாக லக்னோ அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ரிஷப் பண்ட் கடைசி 2 பந்துகள் இருக்கும்போது தான் களத்திற்கு வந்தார். 2 பந்துகளையும் எதிர்கொண்ட அவர், அதில் சிக்ஸர் எதாவது அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஐபிஎல் வரலாற்றில் கடைசி 113 இன்னிங்ஸ்களில் ரிஷப் பண்ட் நம்பர் 7ல் வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பாக 2016ம் ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமாகிய போது ரிஷப் பண்ட் நம்பர் 7 வீரராக களமிறங்கினார். அதன்பின் தற்போதுதான் 7வது இடத்தில் விளையாடியுள்ளார்.
தாமதமாக இறங்கியது ஏன்?
ரிஷப் பண்ட் கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் தாமதமாக களமிறங்கியதாக கூறப்பட்டது. ஆனால் டாஸின் போது கைகள் நன்றாக இருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ரிஷப் பண்ட் தாமதமாக களமிறங்கியதற்கு குல்தீப் யாதவை டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பதுக்கி வைத்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்கள் வருவதற்கு முன்பாக அக்சர் படேல் தனது 4 ஓவர்களையும் வீசி முடித்திருந்தார். இதன் காரணமாகவே ரிஷப் பண்ட் நம்பர் 7ல் களமிறங்கியதாக பார்க்கப்படுகிறது.
தோனியுடன் ஒப்பிடும் ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்டை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏலத்தில் ரூ.27 கோடிக்கு எடுக்கப்பட்ட பண்ட் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அந்த போட்டியிலும் லக்னோ தோல்வியையே சந்தித்தது.
இந்நிலையில், குருவான தோனியை பின்பற்றி சிஷ்யனான ரிஷப் பண்ட்-ம் நம்பர் 7ல் களமிறங்கி டக் அவுட்டாகி இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில ரசிகர்கள், தோனியிடம் உள்ள போராட்ட குணம் கூட ரிஷப் பண்ட்டிடம் இல்லை என சாடியுள்ளனர்.