இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தப் பட்டியலில் மொத்தம் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இடம்பெற்ற ஒரு வீரர் குறைந்தது 3 டெஸ்ட், 8 ஓடிஐ அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
Grade A+
இந்த பிரிவில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டும் இந்த பட்டியலில் இவர்கள் நால்வரது பெயரே இருந்தது. கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இப்பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Grade A
முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த் ஆகிய 6 வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
Grade B
சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய 5 வீரர்கள் Grade B பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Grade C
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ரானா ஆகிய 19 வீரர்களின் பெயர் இதில் உள்ளது.
இதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள்.
யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?
Grade A+ல் இடம்பெற்ற வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாக வழங்கப்படும். அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) தொடர்ந்து சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் அணியின் தலைமைப் பொறுப்புகளை வகிப்பவர்கள் மட்டுமே இதில் இடம்பெறுவார்கள்.
Grade A தரவரிசையில் அனுபவமிக்க மற்றும் நிலையான செயல்பாடு கொண்ட வீரர்கள் இடம்பெறுகின்றனர். இவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Grade A+ தரவரிசைக்கு முன்னேற வாய்ப்புள்ளவர்களாக இவர்கள் இருப்பர்.
Grade Bல் இடம்பெற்ற வீரர்களுக்கு ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்படும். இவர்கள் டி20 அல்லது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்படுபவர்களாக இருப்பார்கள்.
Grade C தரவரிசை பொறுத்தவரையில் புதிதாக அணியில் இடம்பெற்ற வீரர்கள், குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட் மட்டும் சிறப்பாக விளையாட கூடியவர்கள் இந்த தரவரிசையில் இடம்பெறுவார்கள். இவர்களுக்கு ரூ.1 கோடி சம்பளம்.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்
கடந்தாண்டு பிசிசிஐயின் வருடாந்திர சம்பளப் பட்டியலில் இடம்பெற்று இருந்த அவேஷ் கான், கே.எஸ்.பரத், ஜித்தேஷ் சர்மா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இந்த ஆண்டு இடம்பெறவில்லை.
செப்டம்பர் 30, 2025 வரை இந்த ஒப்பந்தம் செல்லுபடி ஆகும். இந்த சம்பள பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இணைந்துள்ளனர்.