குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறியது.
அதிரடி காட்டிய குஜராத் பேட்ஸ்மேன்ஸ்
குஜராத்தின் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 51வது லீக் போட்டி நேற்று(மே 2) நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக SRH அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த GT அணியில் சாய் சுதர்சன், சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரது அதிரடியால் எளிதாக 224 ரன்கள் குவித்தது.
SRH அணி பவுலிங் மற்றும் பீல்டிங் இரண்டிலுமே சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் மற்றும் ஜீஷன் அன்சாரி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அணியின் வெற்றிக்குப் போராடிய அபிஷேக் சர்மா
225 ரன்களை இலக்காகக் கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. இந்த அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என்று பலம் வாய்ந்த் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ஸ்கோர் எடுக்கவில்லை. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தொடரிலிருந்து வெளியேறியதா SRH?
இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு பலம் வாய்ந்த அணியாக திக்ழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட 2025 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை.
எஞ்சிய 4 போட்டிகளில் முறையே டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.