2025 ஐபிஎல் தொடரின் நேற்றைய(மார்ச் 30) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி, இந்த போட்டியில் தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஏனென்றால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலே சென்னை அணி கடைசி வரை தடுமாறி தான் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொண்ட நிலையில், அதில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது.
5 வருடங்களாக சேஸிங்கில் தோல்வி
2021ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட 175 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து சென்னை அணி வெற்றி பெறவில்லை.பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கூட இது தெளிவாக தெரிந்தது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 197 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களை குவித்தது. அதைத் தொடர்ந்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி 20 வர்கள் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. வழக்கமாக அதிரடியாக ஆடும் ரச்சின் ரவீந்திரா, ஆர்ச்சர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், சிவம் தூபே, தோனி உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் அதிகபட்சமாக 63 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது. 2021ம் ஆண்டுக்கு பின்பு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட சென்னை அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.