Home » Blog » த்ரில் மேட்ச்: சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய டெல்லி!

த்ரில் மேட்ச்: சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய டெல்லி!

by Pramila
0 comment

நடப்பு ஐபிஎல் சீசனில் நேற்று(ஏப்.16) நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி முதல் முறையாக சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி அசத்தலாக விளையாடி த்ரில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு அதே 188 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது. இரண்டு அணிகளின் ரன்களும் சமனான காரணத்தால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

வெற்றியை ருசித்த டெல்லி

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி மிட்செல் ஸ்டார்க்கின் அசத்தலான பந்துவீச்சால் 5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என சூப்பர் ஓவரில் விளையாடியது டெல்லி. கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் அந்த ஓவரில் விளையாடினர். ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா பந்து வீசினார். அப்போது 2, 4, 1, 6 என விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.

4 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர்

ஐபிஎல் தொடரில் 2021-ம் ஆண்டுக்கு பிறகு சூப்பர் ஓவர் நடப்பது இதுவே முதல்முறை. சுவாரஸ்யம் என்னவென்றால் அப்போதும் டெல்லிதான் வெற்றி பெற்றது. ஹைதராபாத் – டெல்லி இடையேயான போட்டி ‘டை’ ஆக சூப்பர் ஓவரில் டெல்லி வென்று அசத்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 15 சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டு, ஆட்டத்தின் முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஆட்டநாயகன் ஸ்டார்க்

ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியின் சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ். சூப்பர் ஓவரிலும் சிறப்பாக பந்து வீசி அசத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி அணியின் மாஸ் ரெக்கார்ட்

18 வருட ஐபிஎல் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை டெல்லி படைத்துள்ளது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடி, அவற்றில் 4-ல் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் அணி, 3 வெற்றிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

சந்தீப் ஷர்மாவின் மோசமான சாதனை

நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக பந்துகளை (11) வீசிய பௌலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சந்தீப் ஷர்மா சமன் செய்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு?

நேற்று ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும்போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால் பாதியிலேயே வெளியேறினார். இதனால், அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பு ரியான் பராக்கிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.