Home » Blog » தோல்விக்கு பொறுப்பேற்ற சிஎஸ்கே கேப்டன் தோனி; ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிய ஆர்சிபி!

தோல்விக்கு பொறுப்பேற்ற சிஎஸ்கே கேப்டன் தோனி; ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிய ஆர்சிபி!

by Pramila
0 comment

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று(மே 3) நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில், முதல் முறையாக, ஒரே சீசனில் நடைபெறும் 2 ஆட்டங்களிலும் சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

ருத்ரதாண்டவம் ஆடிய ஷெபர்ட்

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் குவித்தது. ஓப்பனர்களான பெத்தேல் 55 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும் குவித்து அசத்தினர். மற்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி 2 ஓவரில் களமிறங்கிய ரொமாரியோ ஷெபர்ட் ருத்ரதாண்டவம் ஆடி, குறிப்பாக சிஎஸ்கே வீரர் கலீல் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 33 ரன்கள் அடித்து, ஐபிஎல்-ன் 2வது (14 பந்துகளில்) அதிவேக அரை சதத்தை பதிவு செய்தார்.

விராட் கோலி படைத்த மாஸ் ரெக்கார்ட்

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் சாதனை ஒன்று படைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. அதிக முறை ஒரு சீசனில் 500 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தற்போது அவர் தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அவர் 8 சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். வார்னர்(7), கே.எல்.ராகுல்(6), தவான்(5) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

CSK வீரரின் அசாத்திய சாதனை

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.


இந்த போட்டியின் மூலம், CSK-வில் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆயுஷ் மாத்ரே. 17 வயது 291 நாள்களில், அவர் நேற்று 48 பந்துகளில் 94 ரன்களை விளாசி அவுட்டாகினார். இதன் மூலம், ரெய்னாவின் (21 வயது 148 நாள்கள்) ரெக்கார்டை அவர் முறியடித்துள்ளார்.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய அவுட்?

CSK வீரர் டெவால்ட் பிரேவிஸ்க்கு, கள நடுவர் நிதின் மேனன் கொடுத்த LBW அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மோசமான முடிவு என இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இங்கிடி வீசிய பந்தில் அவுட் என கள நடுவர் கூற, 2 ரன்கள் ஓடிய பிறகே ரிவ்யூ கேட்டார் பிரேவிஸ். ஆனால் ரிவ்யூ கேட்கும் காலக்கெடு முடிந்ததாக கூறி, அவுட்-ஐ நடுவர் உறுதி செய்தார். ஆனால் ரீப்ளேவில், பந்து லெக் ஸ்டெம்ப்பை மிஸ் செய்தது தெளிவாக தெரிந்தது. இந்நிலையில், DRS-க்கான டைமர் சரியாக காட்டவில்லை என ரசிகர்கள் புகார் செய்து வருகின்றனர்.

தோல்வியை ஒப்புக்கொண்ட தோனி

இந்த போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த சிஎஸ்கே கேப்டன் தோனி, இந்த சீசனில் பேட்டிங் பந்துவீச்சு என எதுவுமே சரியாக அமையவில்லை என தெரிவித்தார். மேலும் நெருக்கடியான நேரத்தில் போதிய ரன்களை தான் குவிக்கவில்லை என ஒப்புக்கொண்ட தோனி, இன்னும் தான் அதிரடியான ஷாட்களை விளையாடி கடைசி நேரத்தில் அழுத்தத்தை குறைத்திருக்கலாம் என தெரிவித்தார். சிஎஸ்கே வீரர்கள் யார்கர் வகை பந்துகளை இன்னும் அதிகம் பழக வேண்டும் என கூறினார். அதோடு RCB அணியின் ரொமாரியோ ஷெபர்ட் சிறப்பாக விளையாடி ஸ்கோர் செய்தார் என தோனி பாராட்டினார்.

ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிய ஆர்சிபி

நடப்பு ஐபிஎல் தொடரில் 8 வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கியது பெங்களூரு அணி. 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே மீதமுள்ள 3 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி செல்லும்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.