நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ள தமிழர்கள், தங்களது ‘விசா’ காலம் முடிவடைந்த நிலையில், இந்தியாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1990ம் ஆண்டு முதல் 2011 வரை, இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் உயிரிழப்பை தவிர்க்க தமிழகத்தை அடைந்த ஏராளமான இலங்கை தமிழர்கள், பரமத்தி உள்ளிட்ட முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, அங்கு வாழும் பலரது விசா காலாவதி ஆகியுள்ள நிலையில், மே 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என காவல்துறை அறிவித்திருப்பது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இது தொடர்பாக அவர்கள் முதல்வர் அலுவலகத்திற்கு எழுதிய மனுவில், “நாங்கள் பூர்வீக தமிழர்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர், தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்கள். நாங்கள் தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து, இந்திய குடியுரிமை பெற விரும்புகிறோம். அதற்காக தேவையான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் இலங்கை செல்ல விரும்பவில்லை. இதில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, நாங்கள் தொடர்ந்து இங்கேயே தங்குவதற்கும், இந்திய குடியுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.