தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் சில நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மற்றும் அதீத கனமழை எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் ஃபைபர் படகு மீனவர்கள் இது குறித்து மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை விதித்தது மீன்வளத்துறை. இதனை தொடர்ந்து அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், ஆற்காடுத்துறை உள்ளிட்ட சுமார் 25 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் தற்போது பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரை திரும்ப தொலைத்தொடர்பு கருவி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலில் தற்போது மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி வருகின்றனர்.